நன்றி இவர்களுக்கு...

Monday, 3 September 2012

கசங்கிய பூக்கள்

                    
                


          முதன் முதலில் குழந்தை இவ்வுலகத்தை விழித்து பார்க்கும்போது, சிரிக்கும் போது, தான் இவ்வுலகில் எப்படி வாழபோகிறோம் என்று அறியாது. நல்லவர் யார் கேட்டவர் யார் என்று தெரிவதில்லை. பின்னாளில் பல குழந்தைகள் மனதளவில் கசப்பான அனுபவங்களுக்குள் திணிக்கபடுகிறார்கள். பூக்கள் பூத்ததும் மணம் வீசுகின்றன. ஆனால் சில பூக்கள் மொட்டிலேயே கசக்கப்பட்டு விடுகின்றன...


சிறுவயதில் அவளின் புன்னகைதான்  எத்தனை அழகாய் இருந்திருக்கும். அவளின் தாய்தான் எத்தனை விதமாக ரசித்திருப்பாள். கண்ணுக்கு மையிட்டு, பால் மனம் மாறாமல் அவள் திரிந்தது ஐந்து வரைதான். சிறுவயது குழந்தைகள் எதையும் தவறு என நினைத்து ஏதும் செய்வதில்லை.அவர்களுக்கு தவறு  என்பதே என்னவென்று அறிவதற்கில்லை குழந்தைகள் விளையாடத்தான்  செய்கிறார்கள் - என நாம் உணர்வது அவசியம்.  அவள் சமவயதுடைய ஒரு சிறுவனலோ அல்லது வேறுஒருவராலோ அவள் மனதளவில்,உடளவில் பாதிக்கபடுகிறாள்..

ஐந்து முதல் பத்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு வரும் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு போதுமான அறிவுரை மற்றும் தெரிதல் கிடையாது ...  சிறுகுழந்தைகளுக்கு உடலின் அனைத்து பாகங்களும் ஒன்றுதான்.......அந்தரங்க பகுதிகளை யாராவது தீண்டும்போது அவர்களுக்கு அது சரிதானா - இல்லை தவறா என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. குழந்தைகளுக்கு மறைமுக விஷயங்களை நாம் சிறிதளவேனும் உணர்த்தாமல் போவதால் இவ்விடத்தில் நாம் மறைமுக குற்றவாளி ஆகிறோம்.. இதனால் என்னநேர்கிறது...???

அடங்கி நட!


குழந்தை பருவத்தில் (குறிப்பாக பெண் குழந்தை) பறந்து திரிய வேண்டிய இவர்களின் சிறகுகள் ஒவ்வொன்றாக பிய்த்தெறியப்படுகிறது. அவர்களுக்கு கொடுக்கப்படும் போதனைகள் போலியான ஒரு பிம்பத்தை அவளே கட்டிக்கொள்ள நிர்பந்திக்கின்றன. இதனால் தான் அவர்களின் பெண்மையும், உணர்வுகளும் தங்களின் நிலையில் இருந்து மாறுபடுகின்றன. மேலும் அவர்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் ஜீவன்களாக மாற்றப்படுகின்றனர். எது நடந்தாலும் அவள் வெளியே சொல்ல முடியாமல் இருப்பதற்கும், ஏதேனும் தொந்தரவுகளோ, சீண்டல்களோ, தீண்டல்களோ அல்லது வன்மமான அணுகுமுறைகளோ வந்தால், அதை சகித்துக்கொண்டு இருப்பதற்கும் இது போன்று சிறு வயது முதலே அவளுக்கு கொடுக்கப்படும் சமூக போதனைகளே காரணம். இது ஆணின் எளிமையான சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் அவர்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றார்கள். சில குழந்தைகள் கொல்லபடுகிறார்கள் என்பதும் உண்மை .

முதல்முதலில் பாலியல் வன்முறைக்கு குழந்தைகள் உள்ளாகும்போது, அவர்களின் பயமும், செய்வதறியா தன்மையும் வன்முறையில் ஈடுபடுத்துபவர்களுக்கு  சாதகமாகிறது. குழந்தைகள் இவர்களிடமிருந்து விலகி இருக்கவே நினைப்பர். சில குழந்தைகளுக்கு இது தொடர்ச்சியாக நடைபெறும் போது ஒருவித கட்டாயத்திற்கு உட்படுத்தபடுவர்கள். எத்தனை குழந்தைகளுக்கு இதிலிருந்து தப்பித்து வெளிவர இயல்கிறது? 100க்கு 80 % குழந்தைகளுக்கு இதிலிருந்து வெளிவரவே தெரிவதில்லை (இயலுவதுமில்லை) என்பதுதான் உண்மை. அவர்கள் அதற்குள்ளேயே மூழ்கடிக்கபடுகிறார்கள்.
       

தனக்கு என்ன நடக்கிறது என்று அவளால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.ஆனால் இதை தாயிடம் கூறவே அவள் தயங்குகிறாள். எப்படி சொல்வதென்று தெரிவதில்லை. இதை கூறினால் தாய் தன்னை திட்டுவளோ அடிப்பாளோ என்ற பயமும் உண்டு. பாலியல் வன்முறையாளர்கள் குழந்தைகளை வெளியில் சொல்லக்கூடாது என்று பயத்தை ஏற்படுத்திவைக்கிறார்கள். இதை எப்போதுமே நாம் அறியாமல் போவதால் குழந்தைகளுக்கு  உடளவில் தொல்லைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.. அவள் மனதளவில் மவுனமாகிறாள், முடங்கிப்போகிறாள்... அவளுக்குள் அவள் அறியாமலோ ஒரு விஷ விதை வளர்கிறது.. அது அவள் வாழ்வையும் உணர்வுகளையும் உணவாக கொண்டு விருட்சமாய் வளரும்.....,இதனால் அவள் பாதை மாறும்...

பாலியல் வன்முறையால் குழந்தைகள் எவ்விதத்திலெல்லாம் மாற்றம்  அடைகிறார்கள் :
* முதலில் அழமான மெளனம்.
* யாரிடமும் அதிகம் பேசாமை .
* தனிமையை  விரும்புதல்.

பாலியல் வன்முறைக்கு உட்படும் குழந்தைகளுக்குள் செலுத்தபடும் விஷத்தன்மை காலபோக்கில் தனது தன்மையை இழக்கலாம் அல்லது தனது வீரியத்தை மறைமுகமாக வெளிப்படுத்தலாம். இத்தன்மையானது அவர்களின் வளரும் பருவத்தில்தான் வெளிப்படுகிறது.



பதிமூன்று வயதில் இருந்து குழந்தைகள் ஓரளவிற்கு புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்களாக  இருப்பர்... இது அவர்கள் பருவம் எய்தும் காலமும் கூட. இந்நிலையில் தான் இவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அவசியமாகிறது. 

இவர்கள் இருவழியில் சிதைக்கப்படுகிறார்கள். ஒன்று பாலியல் வன்முறையாளர்கள், மற்றொன்று காதல்  (காதலுக்கும்-கவர்ச்சிக்கும் வித்தியாசபடுத்தி பார்க்க தெரியாததால்).
பாலியல் வன்முறையாளர்கள் வெளியிலும் இருக்கலாம், ஏன் நம் வீட்டினுள்ளும் இருக்கலாம். உறவினர் முறையிலும், அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவராகவும், தற்காலத்தில் பெற்ற தகப்பனும், அண்ணன் தம்பி உறவு முறையில் இருப்பவனும், ஆசிரியனும் இதில் அடங்குகிறார்கள்.
             
             * இவர்கள் பெண்களிடம் இது தவறில்லை என கூறுகிறார்கள்.
             * வெளியில் சொன்னால் உன் மானம் தான் போகும் என்கிறார்கள்.
             * உன்னை மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார்கள்.
           
     விருப்பமில்லாமல் இருக்கும் பெண்கள் பலவந்த படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களின் உணர்வுகளும் பறிக்கப்படும்,உயிர்களும் பறிக்கப்படும்.

செவிவழி கேட்ட செய்தி,

வயதான ஒரு மிருகம் அப்போதுதான் பருவம் எய்திய பெண்ணை பலவந்த படுத்தி சீரழித்து இருக்கிறது. அதுவும் அவளின் சிறுவயது தம்பி முன். இந்த வெறிசெயல் இரு உள்ளங்களை எந்த அளவுக்கு காயபடுத்திருக்கும்.... இந்த காயம் வாழ்க்கை முழுவது மாறாமல் இருக்கும்.. புசித்தவனுக்கு பசிதீரும்.. சிதைந்தவர்களுக்கு....?

தோழியுடன் ஒரு சமயம் பதிவு படிக்கும் போது படித்த மோசமான நிகழ்வு,

 "உடன் படிக்கும் சகமாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியை பள்ளி முடிந்த பின் தனிமையில் வற்புறுத்தி வாய்புனர்ச்சிக்கு ஈடுபடுத்தி அதை கண்ணொளியாக எடுத்திருக்கிறான். அந்த பெண் கண்ணீருடனே அந்த நிகழ்வுக்கு உட்படுத்தபடுகிறாள். அவன் இறுதியாக சிரித்த படி கண்சிமிட்டலுடன் கண்ணொளி முடிகிறது."  இந்த சமூகத்தில் மாணவர்கள் எதை நோக்கி போகிறார்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது..

படிக்கபோனால் சக மாணவர்கள், தற்போதைக்கு ஆசிரியர்கள் என எல்லோரும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறார்கள். வேலைக்குப்போனால் முதலாளி, சக ஊழியர்களால்  அவள் பாலியல் வன்முறைக்கு இழுத்து செல்லபடுகிறாள்.

           வெளியில் தான் பாதுகாப்பு இல்லையென்று வீட்டில் இருந்தால், வீட்டில் அதை விட ... உருவாக்கியவன் கைகளாலேயே அழிந்து போக்கும் உயிர்களின் எண்ணிக்கை... அதிகமாகிக்கொண்டே தான்  செல்கின்றன... (கொடூரக் கனவுகளுடன்) உறக்கத்தை தொலைத்த மகள்கள் எத்தனை பேரோ..? யார் அறிவர்.


        பருவ  நிலையில் இவர்கள் மனம் அதிகமாக சிதைவுறுகின்றன. குழந்தைகளை ஏமாற்ற மிட்டாய் தேவைப்படும், இவர்களுக்கு அன்பாய் நான்கு வார்த்தையும், அழகாய் இருக்கிறாய் என்ற ஒற்றை வார்த்தையுமே  போதுமானது. தங்களை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு நான் அழகில்லை என்று நினைக்கும் பெண்கள் இங்குதான் வீழ்ந்து போகிறார்கள்....சிறுவயதிலேயே  பெண்கள் முழுமையாக தடுமாறி தவறிழைப்பது இங்குதான்.  காதல், நட்பு என்ற பொய் இவர்களை சிதைக்கிறது. முதலில் அதை தடுத்தாலும் சில பெண்கள், அதற்க்கு அடிமையாகி தங்களை இழந்து.. இழந்து.. இறுகி போகிறார்கள்...

இவர்களுக்கு இந்த உலகின் புரிதல் இல்லை ...இந்த பாதை எங்கு சென்று முடியும் தெரியுமா..?

                * மனநிலை பதிப்பு .
                * தன்னை மீட்டு கொண்டுவரமுடியாத நிலை.
                * வன்முறை .
                * தாழ்வு மனப்பான்மை.
                * விபச்சாரம்.
                * தற்கொலை முயற்சி.


இறுதியாக!


            பெண் பிள்ளைகள் உலகை அறிவதில்லை...

         ஒருவனுடன் பழகும்போது நிலை தடுமாறினால்... அதை சரி செய்ய முனையும் போது தன்னை தனித்து நிறுத்துவதில்லை... தோழிகளிடமோ, பெற்றோரிடமோ செல்வதில்லை...

      ஒரு பெண்ணுக்கு  ஒருவருடன் காதல் இருந்தது. அது மோகத்தில் முடிந்தது அவன் பெண்களை வசியபடுத்தி விழவைப்பதில் வல்லவன்..  பின்புதான் தெரிந்தது அவன் குணம். திருமணம் செய்யமாட்டான் என்னும் நிலை வந்தது....

          இதற்க்கு பஞ்சாயத்து ஒரு நண்பன் வந்ததான் ( அது அவன் நண்பன் ) ... இவளிடம் பேசி அவன் நல்லவனில்லை, என்று கூறி  மனதை கலைக்கிறான் பின்பு நண்பன் இவளுக்கு ஆதரவு  தருகிறான்... அவனும் அவளை விழ வைக்கிறான்..

       அவன் முடிந்தது அடுத்து ஒருவன் வருவான் என அவளுக்கு தெரியாது... இப்படி ஒரு பெரிய வளையத்திற்குள் அவள் சிக்கவைக்கபடுவாள்..

      சிக்கியபின் வெளிவரும்போது ..... அவளுக்கு அவர்கள் தரப்போகும் பேரென்ன என்பது அவளுக்கு தெரியாது..


சிந்திக்க வேண்டிய தருணம் இது:- 

உயிரில்லா பொருளை உயர்வாக நினைக்கும் நீங்கள் உயிருள்ள ஜீவனான உங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாக்கிறீர்கள்...? சிந்தித்து பாருங்கள்.....ஒரு நல்ல எதிர்காலத்தை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்கி  தாருங்கள்.

      நாங்கள் எங்கள் குழந்தைகளை சரியாகதான் கவனிக்கிறோம் என்று சொல்லிகொள்வதற்க்கு முன் ஒருநிமிடம் சிந்தியுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை எல்லா விதத்திலும் காப்பாற்றுகிறீர்களா......மனித மிருகங்களிடமிருந்துமா....? 

     உங்களால்  இந்த கேள்விக்கு பதில் தர இயலாது. 

   ஏனெனில், உங்களுக்கே தெரியாமல் அவர்களே அறியாமல் அவர்கள் இழப்பது பெண்மை, உணர்வுகள் , குழந்தை பருவம் , அவர்களின் எதிர்காலம்...

     நீங்கள் பாதுக்கவேண்டியது  இவர்களிடம் இருந்துதான். யார் இவர்கள்...? இவர்களை நீங்கள் தேடி கண்டுபிடிப்பது கடினம் தான்.... 

இவர்கள் முகமூடி அணிதிருப்பர்கள் நல்லவர்கள் என்று....

இவர்கள் நம் அண்டை வீட்டிலோ , நம் உறவினர் கூட்டத்திலோ, நட்பு வட்டரத்திலோ , நம்முடன் சம்பந்தபடாத மூன்றாம் நபராக இருக்கலாம்.

அணுகுமுறை!

நீங்கள் இவர்களை தேடுவதை விட உங்கள் குழந்தைகளின் மீது  கவனம் செலுத்தினால் போதுமானது. இக்காலத்திற்கு ஏற்ப அவர்களை வளர்ப்பது உங்களின் பொறுப்பு. அவர்களை காக்க அவர்களுக்கு சொல்லிகொடுப்பது மிக அவசியம். உங்கள் குழந்தை இத்தகைய பாலியல் தொல்லைக்கு உட்பட்டிருந்தால் தயக்கம் கொள்ளவேண்டாம். அதற்குமேல் துணிவுதான் வேண்டும் உங்களுக்கு...

பாலியல் தொல்லை தருபவர் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிப்பதுதான் சரியானது. அந்நேரத்தில் குடும்ப மானம் , மரியாதை என்று யோசிப்பதில் நியாமில்லை. அப்படி யோசித்தால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் மற்றும் அவர்களின் உணர்வுகளை கொல்லும். அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்காதீர்கள். இதற்காக நிறைய பாதுகாப்பு  அரண்கள் உள்ளன. எத்தனையோ இயக்கங்கள் வழிகாட்ட இதற்காக உள்ளது...

குழந்தைகளின் எதிர்காலம் அவர்கள் கல்வியில் உள்ளது போல்.. அவர்களின் எதிர்காலம் மன திடத்தில் அமையவேண்டும்... உங்களின் தைரியம் உங்களின் குழந்தைகளின் எதிர்காலம்... வழிகாட்டுவதும், வாழ்வியலை மேம்படுத்துவதும் உங்களிடம் தான் உள்ளது.


முதலில் நீங்கள் அறியவேண்டியது, உங்கள் குழந்தை தவறுகளுக்குள் இழுத்து செல்லப்பட்டிருக்கிறாள்  என்பதுதான்.. அவளுக்கு நீங்கள் அரவணைத்து கூறவேண்டியதும் இதைத்தான்... அவள் வாழ்க்கை முடிந்து போகவில்லை என்பதை உணர்த்துங்கள்... தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள்.... அவளின் தவறான எண்ணங்களை மென்மையாக மாற்றுங்கள்.... உங்களின் பாதுகாப்பு இனிமேல் பலமாகும் என்பதை தெரிவியுங்கள்.  அவளின் வருங்காலத்தை பற்றி உணர்த்துங்கள். அவளுக்கு சமுதாயம் என்பது நீங்கள் தான். நீங்கள் தான் அவளை நம்பிக்கையுடனும் , வலிமையுடனும் அவளை மற்ற வேண்டும். தவறு என்பது அனைவர் வாழ்விலும் நடப்பது, திருத்தி கொள்வது சிறந்தது. உங்கள் பெண் தவறு செய்தாள் என்பதைவிட தவறுக்கு உட்படுத்தபட்டிருக்கிறாள் என்பது தான் உண்மை....



   
        உங்கள் கையை பிடித்து நடப்பவர்கள் அவர்கள்.. அவர்கள் இன்னும் உங்களை விரல்களை பற்றிகொன்டுதான் இருக்கிறார்கள்...


இந்த கண்ணொளியை காணுங்கள் :-


http://www.youtube.com/watch?v=bv52n2jmGlY&feature=related

http://www.youtube.com/watch?v=ma_fCf5BFj0&feature=player_embedded#!


குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது ...

http://www.facebook.com/AgalOli

                                                                                                           -  கலைவாணி